Skip to main content

ப்ளீஸ்... ப்ளீஸ்... கெஞ்சிக் கேட்கிறேன் தோழர்களே... கட்சியினருக்கு திருமாவளவன் உருக்கமான கடிதம்!

Published on 07/08/2020 | Edited on 07/08/2020

 

thol thirumavalavan

 

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் அவர்களின் மூத்த சகோதரி பானுமதி அவர்கள் கரோனா நோயினால் பாதிக்கப்பட்டு, மறைந்தார். திருமாவளவனை நேரில் சந்தித்து அவருக்கு ஆறுதல் கூற விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் அவரது சொந்த ஊரான அங்கனூருக்குச் சென்றனர். 

 

இத்தகைய நெருக்கடியான சூழ்நிலையில் தலைவரை பாதுகாப்பது நமது அனைவரின் கடமையாகும். நாம் ஒவ்வொருவரும் நம் தலைவரை உயிருக்கு உயிராக நேசிப்பதைத் தலைவர் நன்கு அறிவார். அதை நாம் நேரில் சந்தித்து தான் வெளிப்படுத்த வேண்டும் என்பது இந்த கரோனா பேரிடர் காலத்தில் அனைவருக்கும் ஆபத்தை விளைவிக்கும். எனவே, தோழர்கள் அங்கனூருக்கு நேரில் சென்று ஆறுதல் கூற முற்படுவதைத் தவிர்க்க வேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டிருந்தது. 

 

இந்த நிலையில் தொல்.திருமாவளவன் கட்சியினருக்கு வெளியிட்டுள்ள கடிதத்தில், 

 

என் உயிரின் உயிரான விடுதலைச் சிறுத்தைகளே.. வணக்கம்.

 

என்னை ஆற்றுப்படுத்தும் நன்னோக்கில் என்னைத்தேடி அங்கனூருக்கு வருவது சரிதான். ஆனால், அது முற்றிலும் ஏற்புடையது அல்ல. பல மாவட்டங்களைக் கடந்துவந்து என்னைச் சந்திப்பதில் நிறைய சிக்கல்கள் இருக்கின்றன. எவ்வாறு நம்மைத் தீங்குசூழும் என்பதை நம்மால் ஊகிக்க இயலாது.

 

கரோனா எவ்வளவு கொடியது என்பதை அக்காவைப் பலி கொடுத்ததிலிருந்து மேலும் கூடுதலாக உணர்ந்திருக்கிறேன். அவர் சென்னையில் வீட்டிலேயே தான் இருந்தார். எங்கும் வெளியில் செல்லவில்லை. அவரைத் தேடிவந்து ஓரிருவர் சந்தித்துள்ளனர். உரிய பாதுகாப்புடன்தான் அந்தச் சந்திப்புகள் நடந்துள்ளன. ஓரிரு முறை வீட்டுக்கருகேயுள்ள பெட்டிக்கடைக்கு போனதாகச் சொன்னார். கைகளைச் சுத்தம் செய்வது உள்ளிட்ட எச்சரிக்கையாகச் செய்யவேண்டிய எல்லாவற்றையும் செய்திருக்கிறார். ஆனாலும், அக்காவை எப்படியோ கரோனா தொற்றிக் கொண்டதே!

 

அவரைக் காப்பாற்ற இயலாமல் பறிகொடுக்க நேர்ந்துவிட்டதே! 'பெற்றவயிறு பற்றி எரியுதே' என்று சொல்லிச் சொல்லி, அடிவயிற்றில் அடித்துக் கொண்டு அம்மா மூன்றுநாட்களாக இடையறாமல் கதறும்நிலை உருவாகிவிட்டதே! சிலநேரங்களில் அவர் பித்துப் பிடித்தைப்போல நிலைகுலைந்து தடுமாறும்நிலை ஏற்பட்டுள்ளதே!


கரோனா எவ்வளவு கொடியது என்பதை இனியாவது நாம் உணரவேண்டாமா?

 

யாரிடமிருந்து யாருக்கு இது தொற்றும் என்பதை எவராலும் கணித்திட இயலாதே! அறிகுறி காட்டாமலேயே பதுங்கியிருந்து தொற்றிக்கொள்ளும் கொடிய உயிர்க்கொல்லி அல்லவா இந்தக் கரோனா? மனிதகுலத்தையே அழித்தொழிக்கும் இனக்கொலைக் கும்பல் அல்லவா இந்தக் கரோனா கூட்டம்?

 

இனியும் நாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டாமா? கரோனா கூட்டத்தின் உயிர்க்குடிக்கும் பயங்கரத்திலிருந்து நம்மை நாமே தற்காத்துக் கொள்ள வேண்டாமா?

 

கரோனா தொற்றிக்கொண்டால் அதனை அழித்தொழிக்கும் வலிமை எதற்குமே இல்லை; யாருக்குமே இல்லை. அது நம்மை உற்றார் உறவினரிடமிருந்து தனிமைப்படுத்திக் கொடுமைப்படுத்திக் கொஞ்சம் கொஞ்சமாய் நம் உயிரைக்குடிக்கும். இருமி-இருமி, மூச்சுத்திணறி- மூச்சுத்திணறி நாம் மெல்ல-மெல்ல சாவதை நாம் மட்டுமேதான் பார்க்கமுடியும். என்ன குரூரம் இது?

 

நாம் சடலமான பிறகு செத்தநாயைத் தூக்கி எறிவதைப்போல அல்லவா புதைகுழியில் எறியப்படுவோம்.

 

தோழர்களே, தயவுகூர்ந்து இதை நெஞ்சிலே இருத்துங்கள். எனக்கு ஆறுதல் சொல்ல எத்தனிக்க வேண்டாம். உங்களால் எனக்கு ஏதும் ஏற்பட்டுவிடும் என்பதல்ல என் அச்சம். பயணத்தின் வழியில் கரோனா எங்காவது ஒளிந்திருந்து உங்கள்மீது பாய்ந்து குரல்வளையைக் கவ்விக் கொள்ளும். மென்னியை இறுக்கும். அதன் கோரப்பிடியிலிருந்து தப்பிப்பது யார்க் கையிலும் இல்லை.


கரோனா மிகப் பயங்கரமான கொடுந்தீங்கு.

 

எனவே, கெஞ்சிக் கேட்கிறேன்; என்னை ஆற்றுப்படுத்துவதாக எண்ணிக்கொண்டு தேடிவர வேண்டாம். உங்கள் பாதுகாப்புக்காகவே இறைஞ்சுகிறேன். அங்கனூர் வரவேண்டாம். ப்ளீஸ்...ப்ளீஸ்..

 

இவ்வாறு கூறியுள்ளார். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“மோடி மீது வழக்குப் பதிவு செய்து விசாரிக்க வேண்டும்” - தொல். திருமாவளவன் எம்.பி.!

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
A case should be filed against Modi and investigated  Thirumavalavan MP

ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாராவில் பிரதமர் மோடி நேற்று முன்தினம் (21.04.2024) தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது, “காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையில் தாய்மார்கள் மற்றும் மகள்கள் வைத்திருக்கும் தங்கம் கணக்கீடு செய்யப்பட்டு பங்கீடு செய்யப்படும் என்று வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது. முன்பு காங்கிரஸ் ஆட்சி காலத்தின் போது நாட்டின் உடைமைகளில் இஸ்லாமியர்களுக்கு முன்னுரிமை இருக்கிறது என்று கூறினார்கள். அப்படியென்றால் யாருக்கு உங்கள் வளங்கள் போகப்போகிறது?. நாட்டில் ஊடுருவி வருபவர்களுக்கும், அதிக குழந்தைகளைப் பெற்றெடுப்பவர்களுக்கும், மக்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த செல்வத்தை காங்கிரஸ் கட்சி பங்கிட்டுக் கொடுத்துவிடும். அதாவது, காங்கிரஸ் கட்சியினர் இந்தியாவுக்குள் ஊடுருவிய, அதிக குழந்தைகள் பெற்றுக் கொண்டவர்களுக்கு சொத்துகளை வழங்குவோம் என்கிறார்கள். நீங்கள் கடினமாக உழைத்து சேர்த்த சொத்தை அவர்களுக்குக் கொடுக்க ஒப்புக்கொள்ளப் போகிறீர்களா?” எனப் பேசினார்.

இதனையடுத்து பிரதமரின் இந்தப் பேச்சு பெரும் சர்ச்சையானது. மேலும் பிரதமர் மோடியின் இந்த பேச்சுக்கு பல்வேறு தரப்பினரும் தங்களது கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் எம்.பி. வெறுப்புப் பிரசாரத்தில் ஈடுபடும் பிரதமர் நரேந்திர மோடி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்தியத் தேர்தல் ஆணையத்துக்கு வலியுறுத்தியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “இஸ்லாமியர்களுக்கு எதிரான வெறுப்புப் பிரச்சாரத்தில் ஈடுபடும் நரேந்திர மோடி மீது சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்தியத் தேர்தல் ஆணையத்தை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வலியுறுத்துகிறோம். 

A case should be filed against Modi and investigated  Thirumavalavan MP

ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாரா என்ற இடத்தில் தேர்தல் பரப்புரை மேற்கொண்ட போது நரேந்திர மோடி இஸ்லாமியர்களுக்கு எதிரான நச்சுக் கருத்துக்களை தெரிவித்துள்ளார். மேனாள் பிரதமர் மன்மோகன் சிங் பல ஆண்டுகளுக்கு முன்பு கூறிய கருத்துகளை  விஷமத்தனமாகத் திரித்து இஸ்லாமியர்கள் மீது வெறுப்பு வரும் விதமாகவும் அவர்களது பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் விதமாகவும் மோடி பேசியிருக்கிறார். மோடியின் பேச்சு தேர்தல் விதிமுறைகளை மீறுவதாகவும், மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்துக்கு எதிரானதாகவும் உள்ளது.

‘காங்கிரஸ் கட்சி பொதுமக்களிடம் உள்ள தங்கம் வெள்ளி முதலான சொத்துக்களை எல்லாம் பறிமுதல் செய்து அவற்றை இஸ்லாமியர்களுக்கு விநியோகம் செய்யத் திட்டமிட்டு இருக்கிறது’ என அப்பட்டமான ஒரு பொய்யை மோடி பேசி இருக்கிறார். ‘உங்கள் தேர்தல் அறிக்கையில் நீங்கள் என்ன சொல்லி இருக்கிறீர்கள்?. பொதுமக்களிடம் உள்ள தங்கத்தையெல்லாம் கைப்பற்றி எல்லோருக்கும் கொடுக்கப் போவதாக சொல்லி இருக்கிறார்கள். இதே காங்கிரஸ் ஆட்சி இருந்த போது நாட்டின் வளங்களில் இஸ்லாமியர்களுக்குத்தான் முதல் உரிமை இருக்கிறது என்று சொன்னார்கள்.

அப்படியென்றால் இப்போது பறிமுதல் செய்யும் சொத்துக்களை யாருக்கு கொடுக்கப் போகிறார்கள்? நாட்டில் அதிகமாகக் குழந்தைகளைப் பெற்றுக் கொள்கிறவர்களுக்கு,  நீங்கள் உழைத்து சம்பாதித்த வளத்தையெல்லாம் ஊடுருவல் காரர்களுக்குக் கொடுப்பதாகச் சொன்னார்கள். இதை நீங்கள் ஏற்றுக் கொள்வீர்களா? நம்முடைய தாய்மார்கள் சகோதரிகள் வைத்திருக்கும் தங்கத்தை எல்லாம் தேடி கணக்கெடுப்பு செய்து இஸ்லாமியர்களுக்கு கொடுக்கப் போகிறார்கள். அவர்களுக்குத்தான் சொத்துக்களில் முதல் உரிமை இருக்கிறது என்று மன்மோகன் சிங் சொன்னார். இது நகர்ப்புற நக்சலைட்டின் மனோபாவம். எனது தாய்மார்களே! சகோதரிகளே! காங்கிரஸ் கட்சி உங்களுடைய தாலியைக் கூட விட்டு வைக்காது’என பிரதமர் மோடி பேசியிருக்கிறார். 

A case should be filed against Modi and investigated  Thirumavalavan MP

நமது அரசமைப்புச் சட்டத்தில் உறுதிப்படுத்தப்பட்டுள்ள ஒற்றுமை மதச் சார்பின்மை ஆகிய கோட்பாடுகளுக்கு நேர் எதிரான பேச்சாக மோடியின் பேச்சு அமைந்துள்ளது. அரசியல் ஆதாயத்திற்காக மத ரீதியான வன்முறையைத் தூண்டுவதுதான் அவர்களது நோக்கம் என்பது தெளிவாகத் தெரிகிறது. பிரதமர் மோடியின் பேச்சு மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின் பிரிவு 123 (3a) இன் கீழ் குற்றமாகும். இந்தப் பேச்சு தேர்தல் விதிமுறைகள் தொடர்பாக கடந்த மார்ச் மாதம் ஒன்றிய அரசால் வெளியிடப்பட்ட அறிவிக்கைக்கும் எதிரானதாகும். இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவுகள் 153 ஏ, 154 பி, 298,504, 505 ஆகியவற்றின்படி இது தண்டிக்கப்பட வேண்டிய குற்றமாகும். இந்திய நாட்டில் நேர்மையாகத் தேர்தல் நடத்த வேண்டுமென்றால் தேர்தல் ஆணையம் நரேந்திர மோடி மீது வழக்கு பதிவு செய்து விசாரிக்க வேண்டும். தேர்தல் நடத்தை விதிமுறைகளை எவரும் மீறாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என வலியுறுத்துகிறோம்” எனத் தெரிவித்துள்ளார். 

Next Story

பாஜக-விசிக மோதல்; ஒருவருக்கு மண்டை உடைப்பு

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
BJP-vck clash; One suffered a fractured skull

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

அந்த வகையில் தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெறவுள்ளது.  இந்நிலையில் காலை 7 மணி முதல் வாக்காள பெருமக்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். அதேபோன்று அரசியல் கட்சி தலைவர்கள், வேட்பாளர்கள் என பலரும் தங்களின் வாக்குகளை வாக்குச்சாவடிகளில் செலுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் அரியலூரில் பாஜக மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சி தரப்பினருக்கிடையே நடைபெற்ற மோதலில் ஒருவரின் மண்டை உடைக்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே நரசிங்க பாளையத்தில் உள்ள வாக்குச்சாவடியில் பாஜக மற்றும் விசிகவினர் இடையே மோதல் ஏற்பட்டது. வாக்குச்சாவடி முகவர்களுக்கு உணவு கொடுக்க சென்ற போது ஏற்பட்ட வாக்குவாதத்தில் மோதல் வெடித்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதில் ஒருவரின் மண்டை உடைந்துள்ளது. மோதலில் காயமடைந்த அருண், அஜித் ,செல்வகுமார் ஆகியோர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனால் அங்கு வாக்குப்பதிவு ஒரு மணி நேரத்திற்கு மேலாக பாதிக்கப்பட்டுள்ளது.